20 மூலம் பிரதமரை காரியாலய பணியாளராக்கவேண்டாம் – சஜித் சபையில் எடுத்துரைப்பு
Published by T. Saranya on 2020-10-21 17:28:23
(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்)
20ஆவது திருத்தம் மூலம் நாட்டின் பிரதமரை காரியாலய பணியாளராக மாற்றவேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று 20ஆவது திருத்த சட்ட மூலத்தை சபைக்கு சமர்ப்பித்து நீதி அமைச்சர் அலிசப்ரி உரையாற்றுகையில், கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இருந்த அதிகார முரண்பாடுகள் காரணமாக நாடு ஸ்திரமற்ற நிலைக்கு சென்றது. நாட்டின் தேசிய பாதுகாக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அதனால் இந்த நிலைமையை மாற்றியமைக்கும் நோக்கில் ஜனாதிபதிக்கு தேவையான அதிகாரங்களை வழங்கி இருக்கின்றோம்.
அத்துடன் அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் விடயத்தில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இணைந்தே மேற்கொள்ளவேண்டிய நிலை இருக்கின்றது. இதனால் அவர்களுக்கிடையில் இணக்கப்பாடு இல்லாமல் போகும் போது அதற்கு உறுப்பினர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. அதற்கான தீர்வை 20 இல் மேற்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, 20ஆவது திருத்தம் மூலம் நாட்டின் பிரதமரை சாதாரண காரியாலய பணியாளர் நிலைக்கு ஆக்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டாம். தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்களால் பிரதமருக்கு பாராளுமன்றத்தில் எந்த அதிகாரமும் இல்லை. அதனால் பிரதமரின் அதிகாரங்களை பாதுகாக்கும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்ளுங்கள் என்றார்.
The post 20 மூலம் பிரதமரை காரியாலய பணியாளராக்கவேண்டாம் – சஜித் சபையில் எடுத்துரைப்பு appeared first on Helanews.